இன்றைய தியானம்(Tamil) 26-02-2021
இன்றைய தியானம்(Tamil) 26-02-2021
தேவ சித்தம்
“....மனுஷரால் உண்டாயிருந்ததானால் ஒழிந்துபோம்; தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது;…” – அப். 5:38, 39
மகிமா என்ற ஒரு வாலிபப் பெண்ணிற்கு திருமண வயதாகிவிட்டதால் அவளுடைய வீட்டில் பெற்றோர் அவளுக்கு சரியான வரன் அமையும்படி உறவினர்களிடமும், தெரிந்தவர்களிடமும் சொல்லி வைத்தார்கள். மகிமா இயேசுவை ஏற்றுக்கொண்டவளாய் இருந்தபடியால் அவளும் அதற்காக ஜெபிக்க ஆரம்பித்தாள். அநேக வரன்கள் கைகூடி வருவது போன்று இருக்கும். ஆனால் முடிவில் ஏதோ காரணங்களால் தடையாகிவிடும். இப்படியே நடந்து கொண்டிருப்பதைக் கண்ட மகிமா சற்று சோர்வுற்றவளானாள். ஒரு நாள் இதைக் குறித்து அவள் ஒரு ஆவிக்குரிய சகோதரியிடம் பகிர்ந்துகொண்டாள். அதற்கு அந்த சகோதரி கொடுத்த ஆலோசனை மகிமாவை உற்சாகப்படுத்தியது. அது என்னவென்றால், தினமும் ஒவ்வொரு முறை ஜெபிக்கும்போதும், “என் விருப்பமோ, என் பெற்றோர் விருப்பமோ அல்ல உம் விருப்பம் என் திருமணக்காரியத்தில் நிறைவேறட்டும்” என்று ஜெபிக்க சொன்னார்களாம். தொடர்ந்து மகிமா அதைச் செய்ய ஆரம்பித்தாள். ஆயினும், சில வரன்கள் வந்தும், போயும் கொண்டிருந்தது. ஆனால் சில நாளைக்குள்ளே ஒரு ஏற்ற துணையைக் கர்த்தர் கொண்டு வந்து குறைவில்லாமல் நிறைவாய் திருமணம் நடக்க உதவி செய்தார். அது மகிமாவிற்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது.
ஆம், நம் வாழ்விலும் கூட பல்வேறு விதமான ஆசீர்வாதங்களை தெரிந்தெடுத்துக்கொள்வதற்கு முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலைகளில் நாம் தள்ளப்படும்போது இதுவா? அதுவா? என்று குழம்பிவிடுகிறோம். சில நேரங்களில் சூழ்நிலைகள் எதிர்மறையாய் தெரியும்போது சோர்ந்து போகிறோம். ஏன் நாமும் மகிமாவைப் போல ஜெபிக்கக் கூடாது? எல்லாநிலையிலும் நன்மையானாலும், தீமையானாலும் நம் தேவனுடைய சித்தப்படியே நம் வாழ்வில் நடப்பதுதான் மேன்மை. இன்றும் கூட ஏதோ ஒரு விஷயத்தில் குழம்பியிருக்கிறீர்களா? கர்த்தர்மேல் பாரத்தை வைத்துவிட்டு மேற்கூறப்பட்டுள்ள வசனத்தை மனதில் கொண்டு அவருடைய விருப்பத்திற்காகவும், சித்தத்திற்காகவும் காத்திருங்கள். நிச்சயமாய் மனுஷரால் அல்லது உலகத்தால் உண்டானதாக இருந்தால் அது ஒழிந்துவிடும். தேவனால் உண்டானால் யாராலும் ஒன்றும் செய்யமுடியாது. எல்லாநிலையிலும் கர்த்தருக்கே காத்திருங்கள், அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். யோசேப்பினுடைய வாழ்வில் சம்பவித்த ஒவ்வொரு தருணங்களும் எதிர்மறையாகவே இருந்தது. ஆனாலும், யோசேப்பு தேவனையே சார்ந்து அவருக்கு பயந்திருந்ததால் தேவனுடைய சித்தத்திற்கு நேராய் நடத்திச் சென்றது. அதேபோல கர்த்தரை மட்டும் சார்ந்திருங்கள், அவரே உங்களை நடத்துவார்.
- ஜெபின்
ஜெபக்குறிப்பு:
Healing Service ல் பங்குபெறுபவர்கள் சரீரத்திலும், ஆன்மாவிலும் குணமடைய ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250